ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு அலகுத் தேர்வு எப்போது?

author img

By

Published : Jul 30, 2021, 7:46 AM IST

சென்னையில் 10, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் அலகுத்` தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அலகுத் தேர்வு எப்போது
பள்ளி மாணவர்களுக்கு அலகுத் தேர்வு எப்போது

சென்னை: மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அலகுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனேவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி சென்னையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

கரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. மாணவர்களுக்கு பாடங்கள் கல்வித் தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

தேர்வு அட்டவணை வெளியீடு

இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா வெளியிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

அதில் "அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலன், பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் உள்பட அனைவருக்கும் கல்வித் தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.

மாணவர்கள் கற்றல் திறனை அதிகரிக்க ஆன்லைன் மூலம் அலகுத் தேர்வுகள் நடத்துவதற்கு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டமும் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் தேர்வு

இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் அன்று பிற்பகல் 1.30 மணிக்கு மாவட்டக் கல்வி அலுவலருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். அதனை பள்ளியின் மின்னஞ்சலுக்கு மதியம் 1.45 மணிக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட தேர்வு ஆசிரியர்கள் மதியம் இரண்டு மணிக்கு மாணவர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு வினாத்தாளை அனுப்ப வேண்டும். மாணவர்கள் வினாத்தாள்களை லேப்டாப் அல்லது செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்து தனித் தாள்களில் விடைகளை எழுத வேண்டும்.

விடைத்தாள்களை மாணவர்கள் படமெடுத்து ஆசிரியரின் வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் செய்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும்.

தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் விவரங்களை பட்டியலாக தயாரித்து தலைமை ஆசிரியர்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும். அலகுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களுக்கு தெரிவித்து அவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அலகுத் தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.